
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர், மே 22-
தமிழ் ஊடகங்கள் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரசியல்வாதிகள் சிலர் தனிமனித தாக்குதல் நடத்தி வருவது தொடர்பில் தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzilலை சந்தித்து மகஜர் வழங்கவிருப்பதாக MIJA எனப்படும் மலேசிய இந்திய ஊடகவியலாளர்கள் சங்கத் தலைவர் குணாளன் மணியம் கூறியுள்ளார்.
தமிழ் ஊடகங்கள் மற்றும் அதன் நிருபர்களுக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்புவது, வழக்குத் தொடுப்போம் என்று மிரட்டுவது, அவதூறான செய்திகளை வெளியிட்டு அவதூறு பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது என்று குணாளன் மணியம் தெரிவித்தார்.
ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவரால் மூன்று தமிழ் ஊடக இணையதளங்களுக்கு சம்மன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
“இந்தியப் பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட முறையில் இத்தகைய நபர்களால் தனிப்பட்ட தாக்குதல் தொடர்பான சமீபத்திய சூழ்நிலையை கண்டு நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன்.
“கடந்த காலங்களில், இதுபோன்ற சூழ்நிலை மற்றும் தனிப்பட்ட விமர்சனங்கள் ஒருபோதும் இருந்ததில்லை, ஆனால், தற்போது தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களின் ஊடகவியலாளர்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் அவதூறாக சித்தரிக்கப்படுவது வெட்கக்கேடான செயல் என்று குணாளன் சாடியுள்ளார்.
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஒரு தமிழ் நாளேட்டில் பல்வேறு ஒழுக்கக்கேடான வார்த்தைகளும் கட்டுரையின் மூலம் அவதூறான செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இது என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது”. ஆகையால், இது தொடர்பில் தகவல், தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பாட்சிலை விரைவில் சந்திக்கவிருப்பதாக குணாளன் மணியம் சொன்னார்.
“பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளரின் போலீஸ் புகாரை வெளிப்படைத் தன்மையுடன் விசாரிக்க வேண்டும்.
“ஒரு காலத்தில் முதலாளியிடம் முறையான சம்பளம் வாங்காமல் பணிபுரிந்த ஊடகவியலாளர்கள் எந்த அரசியல் கட்சியாலும் அல்லது பிரிவினராலும் இப்படி அச்சுறுத்தப்படுவதையும் ஒடுக்குவதையும் நான் விரும்பவில்லை.
தமிழ் ஊடகவியலாளர்களை இழிவான அல்லது அருவருப்பான வார்த்தைகளால் திட்டிய அந்த தமிழ் நாளேட்டில் முரட்டுத்தனமான செயல்களை மன்னிக்கவே முடியாது என்றும், இது போன்ற தனிப்பட்ட தாக்குதல்களை நிறுத்த ஃபஹ்மி பாட்சில் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் குணாளன் மணியம் கேட்டுக் கொண்டார்.

