

மஞ்சோங், ஜுன்.1: இவ்வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் 14 மாணவர்கள் கண்களை கட்டியவாறு தங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கை அடையும் பொருட்டு சாகசம் செய்யவுள்ளனர். இந்த வரலாற்று பூர்வ நிகழ்வு மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பெற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாணவர்களுக்கு இந்த நினைவாற்றல் பயிற்சியை வழங்கிய மாஸ்டர் அழகன் கூறினார்.
இந்த வரலாற்றுபூர்வ நிகழ்வு 17.6.2024( திங்கட்கிழமை), காலை மணி 8.00 க்கு தொடங்கவுள்ளது.
இந்நிகழ்ச்சி ஆயர் தாவார் கம்போங் கொலம்பியா புண்ணிமாஸ் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹஜி பெருநாள் என்பதால் அன்று பொதுவிடுமுறையாகும்.
ஆகவே, பொதுமக்கள் இந்நிகழ்வை காண அன்போடு அழைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அதற்கு முன்தினம் ஜுன் 16 ல், அந்த மண்டபத்திற்கு வெளியேவுள்ள திடலில் கண்ணை கட்டியவாறு நடுத்திடலில் இருந்து கோல் அடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அதோடு, மற்றொரு மாணவி கண்ணை கட்டியவாறு 400 மீட்டர் ஓட்டத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஆகையால், மாணவர்களின் இத்தகைய சாகசங்களை காண தவறவிட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் தங்கள் பாடங்களை மீள்பார்வை செய்தல் மற்றும் நினைவுறுத்தும் பொருட்டு இந்த நினைவாற்றல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் இந்த அபார மூளையின் கண்டுபிடிப்புகள் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்கு செய்யப்படவுள்ளது.
குறிப்பாக, அபார மூளையின் செயல்பாட்டை செம்மைப்படுத்த பிரத்தியேக பயிற்சிகள் கடந்தாண்டு டிசம்பர் முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரை பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த மாணவர்கள் தங்கள் கண்களை கட்டிக்கொண்டு நடுத்திடலில் இருந்து கோல் அடித்தல், காய்கறிகளை அடையாளம் கண்டு பெயரை கூறுதல், வலைப்பந்தில் கோல்போடுதல், 400 மீட்டர் ஓடுதல், மற்றவர்களை அடையாளம் காணுதல், எல். இ. டி. வட்டம், மோட்டார் வண்டி ஓட்டுவது போல பயிற்சி, கேரம் விளையாடுதல், மிதிவண்டி ஓட்டுதல், தேகுவான்டோ சாகசம், நாட்டின் வரைபடத்தை அடையாளம் காட்டுதல், பிளாஸ்டிக் கப் அடுக்குதல், லெகோ பூட்டுதல் போன்ற சாகசங்களை செய்து மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பெற அவர் வாழ்த்தினார்.
மாணவர்கள் அவர்களே தங்களை முழுமையாக நம்பினால் மட்டுமே இத்தகைய சாகசங்களை செய்ய முடியும். ஐந்து புலன்களை சரியாக நிர்வகித்து சமநிலையான நிலைப்பாட்டை உருவாக்கினால் மட்டுமே சக்தி கிடைக்கும்.
இது நமது தமிழர்களின் தொன்று தொட்ட கலையாகும். சித்தர்களின் குருகுலத்தில் உருவாக்கப்பட்ட ஆரோக்கியமான கலை என்று அவர் வரலாற்று பதிவை சுட்டிக்காட்டினார்.
சாதனையாளர் நுண்ணறிவு அகடாமி ஏற்பாட்டுக்குழுவாகவும், இணை ஏற்பாட்டுக்குழுவாக சித்தியவான் சித்தர் குடி மையம், புண்ணிமாஸ் மண்டப நிர்வாகத்தினரும் ஒன்றிணைந்து இந்நிகழ்வை வழிநடத்தவுள்ளனர்.
இந்த வரலாற்றுபூர்வ நிகழ்வு மேலும் சிறப்பாக நிகழ நல்லுள்ளம் கொண்ட கொடைநெஞ்சர்களும் உதவிகள் வழங்கலாம். மேலும் கூடுதல் தகவலுக்கு மாஸ்டர் அழகன் (014-6691063) தொடர்புக்கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சி காண மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அன்போடு அழைக்ப்படுகின்றனர்.

