
பினாங்கு, ஜூன் 9-
நாட்டில் உள்ள தேசிய மற்றும் தாய்மொழிப் பள்ளிகளில் இரட்டை மொழித் திட்டத்தை (டிஎல்பி) செயல்படுத்துவதில் மடானி அரசு ஏன் தடைகளை ஏற்படுத்துகிறது? என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேள்வியை எழுப்பினார்.
DLP பாடத் திட்டம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதில் பஹாசா மலேசியா அல்லது ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டுமா என்பதை பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
பள்ளிகள் மதிக்க வேண்டிய பெற்றோரின் “தேர்வு” என்பது முக்கியமான வார்த்தையாகும்.திடீரென்று, ஏப்ரல் 20, 2024 அன்று, குறைந்தபட்சம் ஒரு வகுப்பிலாவது தேசியமொழி கற்பிப்பது கட்டாயம் என்று கல்வி அமைச்சின் புதிய உத்தரவு வந்துள்ளது.
இந்த திடீர் கட்டாயத் திணிப்பு, பெற்றோர் தேர்வு கொள்கைக்கு எதிரானது என்று அவர் சொன்னார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டும் என்றால், ஏன் இந்த ஜனநாயக விரோதத் திணிப்பு இருக்க வேண்டும்.தாய்மொழிப் பள்ளிகளில் தேசிய மொழி கற்பிக்கப்படுவதில்லை என்பதல்ல.
சமீபத்தில், பள்ளி வாரிய உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் உறுப்பினர்கள் உட்பட பினாங்கில் உள்ள 11 தேசிய மற்றும் தாய்மொழிப் பள்ளிகளின் வாரிய உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் DLP திட்டத்தில் புதிய உத்தரவுக்கு எதிராக கூடி மறுப்பு தெரிவித்துள்ளனர்.
DLP ஒரு சிறப்புத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது, இதனால் அறிவியல் பாடங்களை ஆங்கிலம் அல்லது பஹாசா மலேசியாவில் கற்பிக்க முடியும். மாணவர்கள் குறைந்தபட்சம் அறிவியல் பாடங்களைக் கற்கும்போது ஆங்கிலம் அல்லது தேசிய மொழியில் நல்ல வெளிப்பாட்டைக் கொண்டிருப்பதை இது உறுதிசெய்யும்.
ஆனால் அந்த தேர்வு உரிமை மாணவர்களிடமும் பெற்றோரிடமும் விட்டுவிட வேண்டும்.குறைந்த பட்சம் ஒரு வகுப்பிலாவது தேசிய மொழியில் கற்பிக்க வைப்பது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கொடுக்கப்பட்ட தேர்வை கேலிக் கூத்தாக்கியுள்ளது என்று அவர் சொன்னார்.
தேசிய மொழியில் கற்பிக்கும் வகுப்பில் மாணவர்களோ, பெற்றோர்களோ ஆர்வம் காட்டவில்லை என்றால், கல்வி அமைச்சு என்ன செய்யப் போகிறது.
பள்ளி அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை தண்டிக்கப் போகிறதா? டிஎல்பி வகுப்புகள் விவகாரத்தில் கல்வி அமைச்சுதான் அரசியல் செய்கிறது என்று அவர் சொன்னார்.
அம்னோ இளைஞர்கள் இந்த விவகாரத்தை அரசியல் பிரச்சாரமாக மாற்றக்கூடாது.கொள்கை முடிவுகளில் ஏற்படும் மாற்றங்களை தன்னிச்சையாக பள்ளிகளில் குறிப்பாக தாய்மொழிப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த முடியாது.
கல்விக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் சிந்திக்குமாறு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்கை மலேசிய ஐக்கிய உரிமை கட்சி அல்லது உரிமை வலியுறுத்துகின்றது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் டிஎல்பி வகுப்புகள் செயல்பட்ட முந்தைய முறையில் என்ன தவறு? பினாங்கு மாநில அரசு இந்தப் பிரச்சனையை சுமுகமான முறையில் தீர்க்க முயற்சிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாநில அரசு இந்த விஷயத்தில் தீர்வு காணாமல் இருப்பதால், இணக்கமான முறையில் தீர்வு என்பதற்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியவில்லை என்று அவர் சொன்னார்.

