
காளிதாஸ் சுப்ரமணியம்
கோத்தா கெமுனிங், ஜூன் 14-
டீசல் விலை ஏற்றம் தொழிலாளர் பேருந்து நடத்துபவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை கொடுக்கும்.
ஆகவே டீசல் மானியத் திட்டத்தில் எங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று மலேசிய பணியாளர் பேருந்து நடத்துநர்கள் சங்கத்தின் தலைவர் ஜாக்கி சியூ மி கோரிக்கை முன் வைத்தார்.
டீசலுக்கான உதவித் தொகையை அரசாங்கம் அகற்றி விட்டது.
அதே சமயம் பல டீசல் வாகனங்களுக்கு அரசாங்கம் உதவித் தொகையை வழங்கியுள்ளது.
இந்த உதவித் தொகையை பெறும் வாகனங்களின் பட்டியலில் தொழிலாளர் பேருந்து இடம் பெறவில்லை என்பது பெரும் வேதனையாக இருக்கிறது.
இதனால் பேரூந்து ஓட்டுநர்களும் அதன் நடத்துநர்களும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள 1,200 க்கும் மேற்பட்ட தொழிலாளர் பேருந்து நடத்துநர்கள் உள்ளனர்.
இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோரர் டீசல் விலை உயர்வால் சுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று அவர் சொன்னார்.
அவர்கள் தொழிற்சாலையுடன் ஒரு வருடத்தில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.
தொழிலாளர் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுடன் நீண்ட கால ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டிருப்பதால் நாங்கள் விருப்பப்படி கட்டணத்தை உயர்த்த முடியாது.
இப்போதைக்கு
டீசல் விலை உயர்வை ஈடுகட்ட தங்கள் சொந்த மூலதனத்தை செலவழிக்க வேண்டியுள்ளது.
இது பேருந்து நடத்துனர்களுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கும் என்று கோத்தா கமுனிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

