வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர் ஆட்சேர்ப்பு: நிர்வாகத்தை மேம்படுத்த மனிதவள அமைச்சு உறுதி – டத்தோஶ்ரீ ரமணன்

புத்ராஜெயா, ஜூன் 23 –
வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறையை வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையுடனும், நெறிமுறையுடனும் மேற்கொள்வதை உறுதிசெய்ய, வெளிநாட்டுத் தொழிலாளர் நிர்வாகக் கட்டமைப்பை மனிதவள அமைச்சகம் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் முதன்மை ஆதார நாடுகளில் ஒன்றாக வங்காளதேசம் திகழ்வதால், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் சுரண்டல், பாகுபாடு மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகள் இன்றி இருப்பதை உறுதி செய்ய இரு நாடுகளும் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு இது இணக்கமானது என்று அவர் கூறினார்.

நிர்வாகம், தொழிலாளர் நலன் மற்றும் நெறிமுறை சார்ந்த ஆட்சேர்ப்பு வழிமுறைகள் ஆகிய அம்சங்கள், இரு நாட்டுப் பயனாளிகளின் நலனுக்காக மேலும் செம்மைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தினார்.

வங்காளதேசத்துடனான மனிதவள மேலாண்மைத் துறையிலான இத்தகைய ஒத்துழைப்பு, தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், நாட்டின் தொழிலாளர் தேவைகளை நிலையான மற்றும் பொறுப்பான முறையில் பூர்த்தி செய்யவும் உதவும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், மலேசியாவிற்குத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வருவதைப் பாதுகாப்பானதாகவும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலும் தொடர்வதை உறுதி செய்ய, இரு நாட்டுப் பிரதமர்களும் ஒரு கூட்டுப் பணிக்குழுவை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாக மறுஆய்வு செய்வதிலும், இரு நாடுகளின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப புதிய ஒப்பந்தத்தை வரைவதற்கான அடித்தளத்தை அமைப்பதிலும் இந்த கூட்டுப் பணிக்குழு கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
I

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles