
ஈப்போ, ஜுலை. 2: பேராக் மாநிலத்தில் ஒற்றுமை வாரம் என்பதால் பல வகையான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கு மாநிலம் மற்றும் மத்திய ரீதியில் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று டத்தாரன் ஈப்போவில் நடைபெற்ற ஒற்றுமை மெதுவோட்டம் மற்றும் பேராக் மாநில கே.ஆர்.தி. பாலர்பள்ளிகள் போட்டி விளையாட்டை தொடக்கி வைத்தபோது பேராக் மாநில ஒற்றுமை, மனிதவளம், சுகாதாரம் மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
நம்நாட்டின் வரலாற்று பதிவில் மே 13 என்ற நாள் இனச்சண்டை உருவான நாளாக கருதப்படுகிறது. அத்தகைய ஒரு நாள் மீண்டும் வரக்கூடாது என்பதற்காக ஒற்றுமைத்துறை அமைச்சு பல்வேறு ஒற்றுமை நிகழ்வுகளை நடத்தி வரவதாக அவர் குறிப்பிட்டார்.
காலையில் ஒற்றுமை மெதுவோட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல இன மக்களான மலாய்காரர்கள் சீனர்கள், இந்தியர்கள், பூர்வீக குடியினர் கலந்துக்கொண்டனர். இந்த போட்டியில் கலந்துக்கொண்டு மெதுவோட்டத்தை நிறைவு செய்தவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, பேராக் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் கே.ஆர்.தி. பாலர்பள்ளி மாணவர்களின் போட்டி விளையாட்டுகளும் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில் முதல் நிலையை பாகான் டத்தோ மாவட்டம் வெற்றி வாகை சூடியது. இப்போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் அவர் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.
இந்த ஒற்றுமை வாரம் ஜோகூர் பிரிவில் முதல்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதுபோலவே ஒவ்வொரு மாநிலந்தோறும் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேராக் மாநிலம் ஐந்தாவது இடத்தில் இருப்பதால் அதன் அடிப்படையில் செயல்பட்டு வருவதை அ.சிவநேசன் கோடிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

