
தஞ்சோங் மாலிம்,ஜூலை27: நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் எந்தவொரு இனம் விடுப்படாது என்று நினைவுறுத்திய மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்திய நலவிவகார ஆட்சிகுழு உறுப்பினர் அ.சிவநேசன் மக்களின் சுகாதார விவகாரத்தில் மாநில அரசாங்கம் தனி கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளையில்,பூர்வகுடி மக்களின் வாழ்வாதார மேம்பாடு உட்பட கல்வி,சுகாதார விடயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறிய சிவநேசன் ஒவ்வொரு மனிதரிடமும் தனி மனித சுகாதார விழிப்புணர்வும் உடல் ஆரோக்கியமும் அவசியம் என்றார்.
மேலும்,பூர்வகுடி மக்கள் தங்களின் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதை எல்லா காலத்திலும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அப்பிள்ளைகள் போதிய ஊட்டச்சத்துடன் இருப்பதையும் அவர் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மாநில அரசாங்கம் சுகாதார விடயத்தின் பெரும் கவனம் செலுத்தி வருவதோடு பூர்வகுடி நல இலாக்காவின் உதவியோடு பூர்வகுடி மக்களின் சுகாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் விவரித்தார்.
சுங்கை பீல் பூர்வகுடி கிராமத்தில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமினை தொடக்கி வைத்து பேசுகையில் சிவநேசன் இதனை குறிப்பிட்டார்.
ஒவ்வொருவரும் அடிப்படை சுகாதார விழிப்புணர்வை அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதையும் நினைவுறுத்திய சிவநேசன் ஒவ்வொரு கிராமங்களிலும் மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ விழிப்புணர்வு முகாம்களை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மிகவும் நன்நிலையில் நடைபெற்ற மருத்துவ விழிப்புணர்வு முகாமிற்கு வெ.3600 மானியமாக ஆட்சிகுழு உறுப்பினர் வழங்கினார்.
மருத்துவ விழிப்புணர்வு குறித்த கண்காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

