சிப்பாங், ஆக. 13 – சபாக் பெர்ணமில் கடந்த வியாழன்று நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் ஆடவர் ஒருவரைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 26 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 50 கிலோ ஷாபு மற்றும் 6 கிலோ எக்ஸ்டஸி போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
சிலாங்கூர் மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் அதிகாலை 4.30 மணியளவில் கார் ஒன்றில் நடத்திய சோதனையில் ‘சைனீஸ் பின் வெய்’ எனும் மூலிகைத் தேயிலை பெயர் குறிக்கப்பட்ட நீலம் மற்றும் பச்சை நிறப் பாக்கெட்டுகளில் அந்த இரண்டு வகையான போதைப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது என்று சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் கூறினார்.
இதன் தொடர்பில் 40 வயதுடைய வேலையில்லா நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், போதைப்பொருள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் 6 கடந்தகாலப் பதிவுகளை கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சொன்னார்.
bernama