
புதுடில்லி ஆக 20-
ஐஎஸ்ஓ எனப்படும் அனைத்துலக தொழிலாளர் சம்மேளனத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வது தொடர்பில் மலேசியா – இந்தியா இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அந்த ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.
அதன் பின்னர் இப்போதுதான் முதல் முறையாக இந்திய தொழிலாளர்கள் தொடர்பில் இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு 3 நாள் அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இப்போது தனது பேராளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் புதுடில்லியில் இருக்கிறார்.
இன்று இரு நாடுகள் இடையே வர்த்தகம், தொழில் துறை, தொழில் நுட்பம், சுற்றுலா உட்பட பல துறைகளிலும் ஒத்துழைப்பு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்தியா பிரதமர் மோடி முன்னிலையில் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் இந்தியா வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

