
குவா மூசாங், ஆக. 27- அண்மையில் நடைபெற்ற நெங்கிரி இடைத்
தேர்தல் பிரச்சாரத்தின் போது நிந்தனைக்குரிய வார்த்தைகளைப்
பிரயோகித்ததாக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினுக்கு
எதிராக இங்குள்ள செஷசன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி நிக் முகமது தர்மிஸி நிக் முகமது சுக்ரி முன்னிலையில் தமக்கு
எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை 77 வயதான மொகிடின் மறுத்து
விசாரணை கோரினார்.
.
நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 222 நாடாளுமன்ற
உறுப்பினர்களில் 115 பேரின் ஆதரவு தமக்கு இருந்த போதிலும் பிரதமராகப்
பதவியேற்பதற்கு தம்மை அப்போதைய பேரரசர் அழைக்கவில்லை என்று
அவர் கூறியிருந்தார்.
டான்ஸ்ரீ மொகிடினுக்கு எதிராக 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1)(பி)
பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 4(1)வது துணைப் பிரிவின் கீழ்
குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
இச்சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம்
நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5,000 வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம்
அல்லது மூன்று ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது
இரண்டுமே விதிக்கப்படலாம்.
ஒரு நபர் உத்தரவாதத்துடன் 5,000 வெள்ளி ஜாமீனில் மொகிடினை
விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி, வழக்கின் மறு விசாரணையை
எதிர்வரும் நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
பெர்னாமா

