


செமினி: செப் 19-
செமினி புரோகா பாலாவ் தோட்டத்தில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களுக்கும் இன்று உரிய இழப்பீடு வழங்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு தலா 40,000 வெள்ளி மற்றும் வாடகை வீட்டில் குடியிருக்க 10,000 ரிங்கிட் என மொத்தமாக 50,000 ரிங்கிட் இழப்பீடாக வழங்கப்பட்டது.
மேலும் இவர்களுக்கு சிலாங்கூர் கூ வீடமைப்பு திட்டத்தில் வீடுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று
பிகேஆர் உலு லங்காட் தொகுதி தலைவரும் உலுலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியுமான இராஜன் முனுசாமி தெரிவித்தார்.
இவர்கள் குடியிருக்கும்
ஜாலான் புரோகா கம்போங் முனியாண்டி
பகுதியில் சமிக்ஞை விளக்கைப் பொருத்துவதற்கு போவ்ஸ்டட் மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனால் இவர்கள் விட்டை காலி செய்யும்படி இந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஐந்து குடும்பங்களுக்கும் தலா 18,800 வெள்ளி வழங்குவதாக மேம்பாட்டு நிறுவனம் முன்வந்தது.
இதில் 18 மாத வாடகையும் 3 மாத முன் பணமும் அடங்கும்.
ஆனால் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் அனைவரும் உரிய இழப்பீடு கோரி கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து போராடி வருகின்றனர்
இந்நிலையில் நானும் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ச்சுனனும் இக் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம்.
இதன் அடிப்படையில் நீண்ட காலம் வசித்து வருவதால் இவர்களுக்கு நியாயமான இழப்பீட்டை மேம்பாட்டாளரிடமிருந்து பெற்றுத் தரும் முயற்சி இன்று வெற்றி பெற்றுள்ளது என்று அவர் சொன்னார்.
அந்த வகையில் முருகன், செல்வத்துரை, சக்திவேல், உலக நேசன், செம்பகலிங்கம் ஆகியோருக்கு தலா 50,000 ரிங்கிட் இழப்பீடு இன்று வழங்கப்பட்டதாக இராஜன் முனுசாமி தெரிவித்தார்..
இவர்கள் இரண்டு மாதத்திற்குள் தங்களது குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே
இந்த இடத்தில் இருக்கும் மூன்று ஆலயங்களுக்கு தலா 5 ஆயிரம் வெள்ளி என மொத்தம் 15,000 ரிங்கிட் இழப்பீடாக வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

