
சபாக் பெர்ணம், செப் 24
– சுங்கை பெர்ணம் ஆற்றில் நீரின் தரம் நல்ல நிலையில் உள்ளதோடு நேற்று அதிகாலை வரை எண்ணெய் தடயங்கள் அல்லது அசாதாரண வாடை எதுவும் கண்டறியப்படவில்லை என்று சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) தெரிவித்துள்ளது.
பேராக்கில் உள்ள சுங்கை சிலிம் ஆற்றின் மேல் பகுதியில் டீசல் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து லுவாஸ் இந்த சமீபத்திய நிலவரங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.
லுவாஸ் மற்றும் ஆயர் சிலாங்கூர் குழுவினர் இரவு முழுவதும் சுங்கை சிலிம், சுங்கை பெர்ணம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகம் ஆகியவற்றில் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டனர்.
அங்கு ஒவ்வொரு மணி நேரமும் துர்நாற்ற அளவு உட்பட நீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டது.
சுங்கை பெர்ணம் ஆற்றில் நீரின் தரம் நன்றாக இருப்பதாகவும், எண்ணெய் அல்லது அசாதாரண வாடை தொடர்பான தடயங்கள் எதுவும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்ட பிறகு காலை 7 மணிக்கு இந்தக் கண்காணிப்பு முடிவடைந்தது என்று அந்த பதிவு கூறியது.