

செ வே முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் செப் 28-
நாட்டில் உள்ள இந்திய சிறு தொழில் வணிகர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் இதுவரை 13 கோடியே 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.
தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தின் கீழ் 3 கோடி வெள்ளி , அமானா இக்தியார் பெண் திட்டத்தின் வாயிலாக 5 கோடி மில்லியன், பேங்க் ரக்யாட் பிரிவ்-ஐ திட்டத்தின் வாயிலாக 5 கோடி வெள்ளி இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்டது.
இப்போது ஐ பேப் மூலம் 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளது.
ஆக மொத்தம் இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையில் அரசாங்கம் 13 கோடியே 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளது என்று அவர் சொன்னார்.
இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய தொகை இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டதில்லை.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் நலன் கருதி இந்திய வணிகர்களுக்கு உதவும் வகையில் பல உதவி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது என்று இன்று மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் 73 ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மைக்கி இந்த நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த தொழில் சம்மேளனமாகும்.
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் நமக்கு தேவையானதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கேட்டுக் பெறலாம்.
ஆகவே தம்மிடையே ஒற்றுமை மிகவும் அவசியமாகும்.
மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறது.
ஆனால் சிலர் இன்னமும் அரசாங்கத்தையும் பிரதமரையும் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.