
காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர், செப்.29-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு (போஸ் கூ) எந்த வகை சிறப்பு சலுகைகளும் இல்லை என்றும் அவர் காஜாங் சிறைச்சாலையிதான் இருக்கிறார் என்றும் அவரின் புதல்வர் டத்தோ நஸிப்புடின் கூறினார்.
டத்தோஸ்ரீ நஜீப் சிறைச்சாலையில் இல்லை. அவர் வீட்டில் தங்கி வருவதாக பலர் பலவிதமாக பேசி வருகின்றனர். ஆனால் என் தந்தைக்கு எந்த சிறப்பு சலுகைகளும் இல்லை. அவர் சிறைச்சாலையிதான் இருக்கிறார் என மனம் களங்க அவர் மக்கள் சக்தி கட்சியின் 16ஆவது மாநாட்டு மேடையில் தெரிவித்தார்.
மாநாட்டில் தேசியத் தலைவருக்கான உரையின்போது டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன், டத்தோஸ்ரீ நஜீப்பின் புதல்வருக்கு பேச வாய்ப்பளித்தார்.
அவரின் உரையில், இந்திய சமுதாயத்திற்கு அதிக சேவைகளை வழங்கிய ஒரே பிரதமர் போஸ் கூ என்றார். பிரதமராக இருந்தபோது அவரின் சேவை அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டதுடன் கூடுதலாக இந்திய சமுதாயத்தின் மீது அவர் அக்கறை கொண்டு செயல்பட்டார்.
ஜொகூர், மக்கோத்தா இடைத்தேர்தலுக்காக சென்றிருந்தபோது ஜொகூர் மக்கள் போஸ் கூ-வின் மீது ஏக்கத்துடன் உள்ளது எனக்கு தெரிந்தது. இன்று மக்கள் சக்தி கட்சியின் மாநாட்டு மேடையில் அணியப்பட்ட பூமாலைக்கு சொந்தக்காரர் போஸ் கூ தான். அவரின் சேவைக்கான அங்கீகாரம் இது என டத்தோ நஸிப்புடின் தெரிவித்தார்.
தேசிய முன்னணி மீது பல அவதூறுகள் கூறப்பட்டதால் மக்களின் நம்பிக்கை குறைந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நிலை மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்போது தேசிய முன்னணியை முழுமையாக நம்புவதாக கூறிய அவர், மக்தோத்தா இடைத்தேர்தலின் வெற்றி அதற்கு உதாரணம் என்றார்.
டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு முழுமையான பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் இறைவனை வேண்டிக் கொள்வோம் என அவர் சொன்னார்.

