

22ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டு முறை உலகச் சாம்பியன் அர்ஜெண்டினா, சவுதி அரேபியாவை எதிர்த்து விளையாடியது.
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டினா அணிக்கு 10 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இதனை சரியாக பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
எனினும் 2ஆவது பாதியில் சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
48 ஆவது நிமிடத்தில் அந்த அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர்.
இதை முறியடிக்க முயன்ற அர்ஜெண்டினா வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.
இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வெற்றி சாதனை படைத்தது.
சவூதி அரேபியா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு இன்று பொது விடுமுறையை அறிவித்தது.

