மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு – அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும்!! சிவகுமார் கோரிக்கை!!

பத்துகாஜா,அக்21:மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்துறை கல்வியில் அவர்களுக்கு உரிய போதுமான பயிற்சிகளும் திட்ட வரைவுகளும் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.இது அரசு மட்டுமின்றி தனியார் துறைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு விவகாரத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும்,மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகள் மிகவும் முக்கியமானவை, ஏனென்றால் அது அவர்கள் சுதந்திரமாக இருக்கவும், பொருத்தமான வேலை வாய்ப்புகளை வழங்கும்போது அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக அமையவும் வழிசெய்கிறது. இது அரசாங்க உதவி அல்லது குடும்ப ஆதரவை அவர்கள் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உதவுகிறது என்றார்.

அதுமடுமின்றி,மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்கள் சமூகத்தில் ஒருங்கிணைவதற்கான வாய்ப்பை அது உறுதிசெய்து, அதன்மூலம் சுயமாய் தங்களால் இயங்க முடியும் என்னும் உணர்வை உருவாக்கி தன்னம்பிக்கையை அவர்களிடையே அது விதைக்கிறது என்றார்.நடப்பில் மாற்றுத்திறனாளிகள் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய தனித்துவமான திறன்களையும் திறமைகளையும் கொண்டுள்ளனர். வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்றும் தனது நம்பிக்கையினை சிவகுமார் வெளிப்படுத்தினார்.

வேலை வாய்ப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை உரிமை. மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் சமூகத்தில் பணியாற்றுவதற்கும் பங்களிப்பதற்கும் நியாயமான வாய்ப்புக்கு தகுதியானவர்கள். வேலைவாய்ப்பு என்பது குறைபாடுகள் உள்ளவர்களுக்கு வாழ்வின் நோக்கத்தையும் இலக்குகளையும் தருவது மட்டுமல்லாமல், அவர்களின் மன மற்றும் உணர்ச்சி மிகு நல்வாழ்வை மேம்படுத்தவும் முடியும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகள் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகும் என்றும் பத்துகாஜா நாடாளுமன்றத்தில் கல்வி நிதி மற்றும் தொழில்சார்ந்த நிதியுதவிகளை வழங்கிய நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கும் நிதியுதவி வழங்கிய பின்னர் சிவகுமார் இவ்வாறு குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles