
கோலாலம்பூர்: அக் 24-
அடுத்த ஆண்டு கண்ணதாசன் விழாவில் முருகு சுப்பிரமணியம் பெயரில் தங்கப்பதக்கத்துடன் விருது வழங்கப்படும் என்று
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
அண்மையில் அமரர் முருகு சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டேன்.
இந்திய சமுதாயத்தின் வழிகாட்டியாகவும், உரிமைக் குரலாகவும் இருந்தவர் அவர் என்று துன் சாமிவேலுவால் பாராட்டப்பட்டவர் முருகு சுப்ரமணியம்.
தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றிய, தமிழ் ஏடுகளின் வரலாற்றில் முத்திரை பதித்த ஒரு மாமனிதர் முருகு சுப்பிரமணியம் ஆவார்.
தமிழர் நல்வாழ்வுடன் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, மலேசியத் தமிழர்கள் இந்த நாட்டில் நிலைத்திருக்கப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.
சமுதாயத்தைச் சீர்திருத்தக் கூடிய, நெறிபடுத்தக் கூடிய கருத்துகளை தமிழ் நேசன் பத்திரிகை வாயிலாக தந்தவர் முத்தமிழ் வித்தகர் முருகு சுப்ரமணியம்.
ஊடகத்துறை வாயிலாக மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கிய அந்த மாமனிதரின் சாதனைகள் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
இதன் அடிப்படையில் முருகு சுப்ரமணியத்தின் நினைவாக கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கண்ணதாசன் விழாவில் தங்கப்பதக்கத்துடன் விருதும் வழங்கப்படும் என்று நேற்று தமிழ் பத்திரிகையாளர்களுடன் நடத்திய தீபாவளி உச்சரிப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த நிகழ்வில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் செயலவை உறுப்பினர்கள் டத்தோஸ்ரீ சர்வணனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.

