
கோலாலம்பூர்: நவ 13-
சரவா மாநிலத்திற்கு தீபாவளிக்கு பொது விடுமுறையை பெற்றுத் தருவதற்கு துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஃபடில்லா யூசுப்பின் மேற்கோள்களும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என்று மலேசிய இந்து ஆலயங்கள் ஒருங்கிணைப்பு பேரவையின் தலைவர் டத்தோ கண்ணா சிவகுமார் தெரிவித்தார்.
தீபாவளி என்பது உலகம் முழுவதும் உள்ள இந்து சமூகத்தினர் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும்.
ஆனால் மலேசியாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்த பண்டிகை அனைத்து மலேசியர்களுடனும் இணைந்து கொண்டாடப் படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் வழங்கிய வாழ்த்து செய்தியில்
நாடு முழுவதும் தீபாவளியை மகிழ்ச்சியுடனும் கொண்டாட இனம், மதம் பாராமல் எல்லா மலேசியர்களையும் அழைத்தார்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் பிரதமரின் அழைப்பு எல்லாருக்குமானது.
எனவே, இத்திருவிழாவைக் கொண்டாடும் பொது மக்கள் தங்கள் நண்பர்கள், அண்டை வீட்டாருடன் இணைந்து கொண்டாடும் வகையில், இந்த விழாவை மலேசியா முழுவதும் பொது விடுமுறையாக மாற்ற வேண்டும்.
இந்நிலையில் சரவா மாநிலத்தில் தீபாவளியை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கையை துணைப் பிரதமர் முன்வைத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.