

பகான் டத்தோ,நவ15: பேரா மாநிலம், பாகான் டத்தோ மாவட்டத்தில் அமைந்துள்ள துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, தமிழ்க் கல்வித்துறையில் புதிய சாதனை படைத்துள்ளது. மலேசிய கல்வி அமைச்சின் 2027 கல்வித்திட்டத்தின் கீழ், “சொல்வயல்” எனும் புதிய டிஜிட்டல் அகரமுதலியை அது உருவாக்கியுள்ளது.
அப்பள்ளியின் ஆசிரியர் தனேசு, ஆசிரியர் மகாவீரபிரசாத் மற்றும் ஆசிரியை காந்திமதி ஆகியோர் இப்பெரும் முயற்சியில் அதன் இலக்கை எட்டியுள்ளனர்.
அவர்கள் 56,868 ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் விளக்கங்களைக் கொண்ட இந்த அகரமுதலியை மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கியுள்ளதாக அதன் செயல்திட்டத் தலைவர் ஆசிரியர் தனேசு பாலகிருட்டிணன் தெரிவித்தார்.
மேலும், “மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதே எங்களது முக்கிய நோக்கம். இந்த அகரமுதலி மூலம் மாணவர்கள் எளிதாக ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் விளக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும்,” என செயல்திட்டக்குழு ஆசிரியர் மகாவீரபிரசாத் குப்பன் கூறினார்.
நாட்டின் டிஜிட்டல் கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கங்களான டிஜிட்டல் கற்றல் முறை, தொழில்நுட்ப ஊடுருவல், மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க மேம்பாடு ஆகிய அனைத்தையும் ‘சொல்வயல்’ திட்டம் பிரதிபலிக்கிறது, என ஆசிரியை காந்திமதி ஸ்ரீதரமோகன் மேலும் விவரித்தார்.
இத்திட்டத்தில் ஆசிரியர் மகாவீரபிரசாத் குப்பன் மற்றும் ஆசிரியை காந்திமதி ஸ்ரீதரமோகன் ஆகியோரும் முக்கியப் பங்காற்றியுள்ளனர். தொழில்நுட்ப வடிவமைப்பு முதல் உள்ளடக்க மேலாண்மை வரை அனைத்தும் பள்ளி ஆசிரியர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“இது மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல். இத்திட்டம் மற்ற பள்ளிகளுக்கும் முன்மாதிரியாக அமையும்,” என கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் இந்த அகரமுதலியைச் செயலி (App) வடிவில் வெளியிடவும், தொடர்ந்து புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் 2027 கல்வித்திட்டத்தில் “சொல்வயல்” அகரமுதலி இணைக்க செயல்திட்டத் தலைவர் ஆசிரியர் தனேசு பாலகிருட்டிணன் ஏற்பாடு குழுவினரிடம் பரிந்துரை வைத்துள்ளதாக கூறினார். இது மலேசியத் தமிழ்க் கல்வியின் தரத்தை மேலும் உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்னும் நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

