
பத்துகாஜா,நவ19: இளையத்தலைமுறையினருக்கு ஆரோக்கியமான நடைமுறைகளையும் நல்லதொரு நினைவாற்றலையும் ஏற்படுத்துவதில் சமூக சிந்தனையோடு செயல்பட்டு வரும் பூசிங் வட்டாரத்தில் அமைந்துள்ள அனந்த யோகா மார்க மையத்திற்கு பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் வெ.5000 மானியமாக வழங்கினார்.
அம்மையத்தின் அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்திற்கான பங்களிப்பை மதிப்பதோடு அவர்களின் அர்த்தமுள்ள அரும்பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தாம் இந்த மானியத்தை வழங்குவதாக அவர் மேலும் கூறினார்.
இம்மையத்திற்கு இது தனது முதல் வருகை அல்ல என்றும் கூறிய சிவகுமார்,ஒவ்வொரு முறையும் இங்கு வரும் போது மனம் ஒருவித புத்துணர்ச்சியை பெறுவதாகவும் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆரோக்கியமான நடவடிக்கைகளும் நமது பாரம்பரியத்தை காத்திடும் செயல்பாடுகளும் காலத்திற்குரியது என்றார்.
மேலும்,அவர்களின் செயல்பாடுகளில் ஒன்றான பாரம்பரிய முறையிலான மசாஜ் சிகிச்சை பலருக்கு பெரும் பயனாகவும் நன்மையாகவும் அமைந்திருப்பதை உணரவே முடிகிறது.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனித்துவமான மூலிகை தைலத்தால் ஏற்படும் உடல்நலன் சார்ந்த விடயங்களையும் அவர் குறிப்பிட்டார்.
நமது பாரம்பரியமான யோகா,சித்த மருத்துவம் என தொடரும் ஒவ்வொன்றும் நம் இனத்தின் பொக்கிசம்.அதனை காப்பதோடு அதனை நம்மவர்கள் அனுபவிக்கும் வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் நாம் மெய்பிக்க வேண்டும்.அவ்வகையில் தான் கடந்தாண்டு தனது சேவை மையத்தில் சித்த மருத்துவம் சார்ந்த நிகழ்ச்சியினை தாம் ஏற்பாடு செய்ததாகவும் அது நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இவ்வாண்டும் அம்மாதிரியான சித்த மருத்துவ நிகழ்ச்சியை செய்ய எண்ணம் கொண்டிருப்பதாகவும் சிவகுமார் கூறினார்.
நம் இனத்தின் பாரம்பரியமான இந்த யோகாகவும் சித்த மருத்துவமும் உலகின் தொன்மையான ஒன்று.இது நமக்கே உரிய அடையாளமும் பாரம்பரிய வரலாறும்.இதனை நாம் பாதுகாக்கும் அதேவேளையில் வரும் நம் எதிர்கால தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்பதில் தீவிர முனைப்பு காட்டவும் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

