


செ.வே.முத்தமிழ்மன்னன்
புத்ரா ஜெயா, நவ 27-
வரும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை மித்ரா மானியத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று மித்ரா நடவடிக்கை குழு தலைவர் மாண்புமிகு பிரபாகரன் தெரிவித்தார்.
பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மித்ரா என்றழைக்கப்படும் மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவின் நிதிக்கு முறையாக விண்ணப்பம் செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
அரசு சார்பற்ற அமைப்புக்கள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் இந்த மித்ரா நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.மித்ரா போர்ட்டல் எப்போது திறக்கப்படும் என்று மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை மித்ரா நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றார் அவர்.
உயர்கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கும் சிறுநீரக நோயாளிகளுக்கும் இவ்வாண்டு இறுதிக்குள் நிதி வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் பரிசீலித்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மித்ரா நிதி அனைத்தும் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.
யார் யாருக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது என்று பெயர் பட்டியலை மித்ரா அகப்பக்கத்தின் வழியாக பார்த்து கொள்ளலாம்.இதில் எந்தவொரு ஒளிவு மறைவும் இல்லை. அனைத்தும் சீராக மற்றும் முறையாக உள்ளது என்று அவர் சொன்னார்.
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மித்ரா ஏற்பாட்டில் இன்று புத்ரா ஜெயாவில் தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரிய உறுப்பினர் ஜெயக்குமார், வெற்றி வேலன், சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் தலைவர் நிவாஸ் இராகவன், துணை தலைவர் பிரபாகரன், செயலவை உறுப்பினர்கள் வி.கே.கே இராஜசேகரன், டாக்டர் விஷ்னு, மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், உதவித் தலைவர்கள் ஜீவா ராஜா, ரவி முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

