
புதுடெல்லி: டிச 19- அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தால் அமித்ஷா பதவி விலகக் கோரியும், மன்னிப்பு கேட்கக் கோரியும் நாடாளுமன்ற அவைகளில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் நாள் முழுவதும் இரு அவைகளும் முடங்கின.
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு விவாதம் நடந்தது.
இதில் மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் நிறைவாக நேற்று பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘இன்று அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவது பேஷனாகி விட்டது.
அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என முழங்குபவர்கள், அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால், 7 பிறவிகளுக்கும் சொர்க்கத்தை அடையலாம்’’ என கடுமையாக விமர்சித்தார்.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித்ஷா பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

