
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் டிச 20-
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான அரசாங்கம் ஆகஸ்ட் 5ஆம் தேதி கவிழ்ந்தபின், சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தினசரி சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை பெரும் உச்சக் கட்டத்தை அடைந்து உள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை இடைக்கால அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் அமைப்புக்கள் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் தலைமையில் அரசு உடனடியாக தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மஇகா இளைஞர் அணி இன்று மலேசியாவுக்கான வங்காள தேச தூதரகத்தில் ஆட்சேப மகஜரை வழங்கியது.
மஇகா தேசிய இளைஞர் அணி தலைவர் அர்வின் கிருஷ்ணன், துணை தலைவர் கேசவன் தலைமையில் ஒன்று கூடிய இளைஞர் அணியினர் இன்று வங்காள தேசம் தூதரகத்தின் முன் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.
மஇகா தேசிய மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ முனியாண்டி, டத்தோ ராஜசேகரன், ம இகா தேசிய ஊடக பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம், புத்ரி தலைவி தீபா சோலைமலை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த அமைதி மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

