
ஈப்போ,டிச23: நாட்டின் மிக முக்கியமான கவிஞராகவும் எழுத்தாளராகவும் பன்முக படைப்பாளராகவும் வாழ்ந்து மறைந்த நவீன இலக்கிய சிந்தனை சிற்பி எழுத்தாளர் கோ.முனியாண்டியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் புதுக்கவிதை போட்டியினை பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்த வேண்டும் என்னும் கோரிக்கையை வழக்கறிஞரும் சங்கத்தின் புரவலருமான தமிழ்நெஞ்சர் மதியழகன் கோரிக்க விடுத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் எழுத்தாளர் கோ.முனியாண்டி புதுக்கவிதை போட்டிக்கு தனது சொந்த நிதியாக வெ.5000 வழங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.
பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் அவர் இதனை அறிவித்தார்.
இந்நாட்டில் புதுக்கவிதை ஆளுமைகளில் ஒருவரான கோ.முனியாண்டி நவீன இலக்கியச் சிந்தனைவாதியுமாவார்.அவரது நினைவாக இந்த புதுக்கவிதை போட்டி நடத்தப்படுவது அவரது எழுத்துக்கும் சிந்தனைக்கு தனித்துவ அங்கீகாரத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கும் என்றார்.
அதுமட்டுமின்றி,ஆளுமை மிக்க அந்த படைப்பாளியின் வரலாற்றை காலம் கடந்தும் பதிவு செய்ய இப்புதுக்கவிதை போட்டி வழிசெய்யும் எனவும் அவர் நினைவுறுத்தினார்.
இந்த நனிச் சிறந்த அறிவிப்பை செய்த வழக்கறிஞர் மதியழகனுக்கு சங்கத்தின் தலைவர் கவிஞர் ந.கு.முல்லைச் செல்வன் நன்றி கூறியதோடு சங்கத்தின் உறுப்பினருமான எழுத்தாளர் கோ.முனியாண்டியின் நினைவாக இப்புதுக்கவிதை போட்டி நன்முறையில் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

