
புதுடெல்லி: டிச 27-
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்.
அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த போது, இந்தியாவின் 13ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்றார்.
2014இல் மீண்டும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற போது, 2வது முறையாக மன்மோகன் சிங் பிரதமரானார்.
தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்பியாக இருந்துள்ளார்.
2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்த பிறகு, அவர் மாநிலங்களவை எம்பியாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
2019இல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டாக உடல்நலக் குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்
இந்நிலையில் நேற்று இரவு 9.51மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது.
மன்மோகன் சிங், மே 22, 2004 அன்று பிரதமராக பதவியேற்றார். மே 26, 2014 வரை தொடர்ந்து 2 முறை பதவி வகித்தார். இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மொத்தம் 3,656 நாட்களுக்குத் தலைமை தாங்கி, ஜவகர்லால் நேரு (6,130 நாட்கள்) மற்றும் இந்திரா காந்தி (5,829 நாட்கள்) ஆகியோரைத் தொடர்ந்து, மன்மோகன் சிங் இந்தியாவின் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய மூன்றாவது பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.

