

பத்துகாஜா,ஜன15: நமது அடையாளமாகவும் நம் பெருமைக்குரியவர்களுமான மூத்தகுடி மக்களின் சுகாதாரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் நினைவுறுத்தினார்.
மூத்தகுடி மக்கள் நம் நாட்டின் பொக்கிசம்.அவர்களின் சுகாதாரமும் ஆரோக்கியமான வாழ்வியல் சூழலும் அனைவராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.அவர்களின் மீதும் அவர்களின் சுகாதார நலன் மீதும் அரசு பெரும் அக்கறையும் அன்பும் கொண்டிருக்கும் சூழலில் குடும்பத்தினரும் அதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
துரோனோ அரசு சுகாதார கிளினிக் ஏற்பாட்டில் நடைபெற்ற மூத்தகுடி மக்கள் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடக்கி வைத்து பேசுகையில் அவர் இதனை வலியுறுத்தினார்.
ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் மூத்தகுடி மக்களின் மீது குடும்ப உறவுகளின் அக்கறையும் அன்பும் அவர்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வழிசெய்யும் என்றும் கூறிய சிவகுமார் சுகாதார அமைச்சின் கீழ் மடானி அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் வசதிகளையும் சலுகைகளையும் வழங்கியுள்ள நிலையில் அதனை நாம் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டு கொண்டார்.
முன்னதாக,இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தலைமை மருத்துவர் இந்நிகழ்ச்சி குறித்தும் அதன் இலக்கு குறித்தும் விரிவாக பேசினார்.
மேலும்,நாளுக்கு நாள் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் மூத்தகுடி மக்கள் மீதான அன்பும் பரிவும் காலத்திற்கு உகர்ந்த நிலையில் இருத்தல் வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் சுகாதாரம் சார்ந்த கண்காட்சிகளும் இடம் பெற்ற நிலையில் இலவச மருத்துவ பரிசோதனைகளும் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது

