
ஷா ஆலம், ஜன. 23- சிலாங்கூர் மாநில அரசின் மைசெல் எனப்படும்
அடையாள ஆவண உதவி மையத் திட்டத்தின் வாயிலாக இதுவரை 2,522
பேர் அடையாள ஆவணங்களைப் பெற்றுள்ளனர்.
இந்த அமைப்பின் முயற்சியால் அவர்கள் அனைவருக்கும் பிறப்பு பத்திரம்,
குடியுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதாக
மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
அடையாள ஆவணங்கள் தொடர்பில் மொத்தம் 6,545 விண்ணப்பங்கள்
கிடைக்கப் பெற்ற வேளையில் அவற்றில் 2,522 விண்ணப்பங்களுக்கு தீர்வு
காணப்பட்டன. அங்கீரிக்கப்பட்டவற்றில் குடியுரிமை தொடர்பான 854
விண்ணப்பங்களும் பிறப்பு பத்திரம் தொடர்பான 616 விண்ணப்பங்களும்
தத்தெடுப்பு தொடர்பான 560 விண்ணப்பங்களும் அடங்கும் என அவர்
சொன்னார்.
அடையாளப் பத்திரங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குவோரில்
பலர் தேர்வை எழுதும் மாணவர்களாக உள்ளதால் அவர்களுக்கு உதவும்
நோக்கில் இத்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது.
குடிநுழைவுத் துறை அல்லது உள்துறை அமைச்சின் அதிகாரத்தில்
தலையிடும் நோக்கம் மாநில அரசுக்கு கிடையாது. அடையாளப்
பத்திரங்களைப் பெறுவதற்கு தேவையான அடிப்படை உதவிகளை
வழங்கும் பணிகளை மட்டுமே நாங்கள் மேற்கொள்கிறோம் என்றார் அவர்.
மைசெல் முயற்சியால் அடையாள ஆவணங்களைப் பெற்ற 22 பேருக்கு
இங்குள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற அடையாளப் பத்திரங்களை
வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார்.

