
கோலாலம்பூர், பிப் 1-
கெடா மாநிலத்தில் பாலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள கோல கெட்டில் கத்துப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரத்திற்கு விரைந்து தீர்வு காண பட வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் ஆகியோர் உடனடியாக தலையிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
70 ஆண்டுகால வரலாறு கொண்ட அந்த தமிழ்ப்பள்ளி சைம் டர்பி நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் இருந்தது பிறகு தற்போது அந்த நிலம் கைமாறி விட்டதால் அந்த தமிழ்ப்பள்ளி அங்கும் இங்குமாக தத்தளித்து கொண்டு இருப்பது வேதனை அளிக்கிறது.
இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி மட்டும் அல்ல, அவர்களின் பாதுகாப்புக்கும் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
2023ஆம் ஆண்டு, கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, தாவார் தேசிய பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த ஒரு வருடமாக தாவார் தேசியப் பள்ளியில் இந்தத் தமிழ்ப்பள்ளி இயங்கிவந்தது.
மிக விரைவில் தேசியப் பள்ளி மறுசீரமைக்கப்படும் என்பதால், கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய பள்ளி வளாகத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவையை முன்னிறுத்தி, தக்கத் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும். மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை இந்தப் பிரச்சனையால் தடைபட்டு விடக்கூடாது.
அதே வேளையில் அவர்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

