நாடாளுமன்றம் நாட்டின் பணி இலக்குகளை விவாதிக்கும் களம் – அவதூறு பரப்பும் இடமல்ல – பேரரசர் நினைவுறுத்து

ஷா ஆலம், பிப். 4 – நாடாளுன்றம் மக்கள் நலன் சார்ந்த பணி இலக்குகள் மற்றும் நாட்டின் சுபிட்சம் குறித்து விவாதிக்கும் களமே தவிர, ஒருவரை
ஒருவர் வசைபாடுவதற்கும் அவதூறு பரப்புவதற்குமான இடமல்ல என்று
மாட்சிமை தங்கிய பேரரசர் கூறினார்.

பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான முதலாவது
கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றிய சுல்தான் இப்ராஹிம்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையின் அரணாக விளங்க வேண்டும்.அதை விடுத்து மக்களைப் பிளவுபடுத்தும் முகவர்களாகச் செயல்படக்
கூடாது என நினைவுறுத்தினார்.

ஆகவே, ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் விளையாட்டுகளை
நடத்துவதையும் கட்சி அல்லது குறிப்பிட்ட தரப்பினர் மீது மட்டும்
அக்கறை காட்டுவதையும் நிறுத்திக் கொள்ளும்படியும் உறுப்பினர்களை
அவர் கேட்டுக் கொண்டார்.

அதே சமயம், கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்
போது தங்கள் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு
விவாதங்களின் போது பண்புடனும் நடந்து கொண்ட உறுப்பினர்களைத்
தாம் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இன்னும் சில உறுப்பினர்கள் பழைய மனப்போக்கிலிருந்து
விடுபடாதவர்களாக உள்ளனர். அந்த உறுப்பினர்கள் தங்களை உணர்ந்து
செயல்பட வேண்டும் என்பதோடு மனப்போக்கிலும் மாற்றத்தை ஏற்படுத்த
வேண்டும் என்றார் அவர்.

அரசியல் நிலைத்தன்மையைக் கட்டிக்காப்பதில் அனைத்து
உறுப்பினர்களும் ஆற்றி வரும் பங்கினை நான் பாராட்டுகிறேன். நாட்டின்
பொருளாதார மற்றும் சமூகவியல் வளப்பத்திற்கு அரசியல் நிலைத்தன்மை
முக்கியமானதாகும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே, இலக்கு மானியத் திட்டத்தை வரவேற்றுப் பேசிய
மாமன்னர், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த
இயலும் என்றார். இருப்பினும். இந்த இலக்கு மானியம் சரியானத்
தரப்பினரைச் சென்றடைவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும்
நினைவூட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles