
கோலாலம்பூர் பிப் 7-
உலகப் புகழ்பெற்ற பத்துமலை திருத்தலத்திற்கு சிறப்பு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு திட்டங்களுக்கான அனுமதிக்கு உடனடியாக உத்தரவிட்ட பிரதமருக்கு இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்துமலை தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமருக்கு தேவஸ்தானம் அழைப்பு கொடுத்திருந்தது.
ஆனால், தைப்பூச தினத்தன்று அவர் வர முடியாததால் அவர் இன்று பத்துமலைக்கு சிறப்பு வருகை புரிந்தார்.
பத்துமலையில் நடைபெற்று வரும் தைப்பூச ஏற்பாடுகளையும் அவர் பார்வையிட்டார்.
அதே வேளையில் பத்துமலையில் கட்டப்படவிருக்கும் பிரமாண்டமான பல்நோக்கு மண்டபம் குறித்தும் பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் பிரதமரின் பார்வைக்கு கொண்டு சென்றேன்.
உடனே இந்த திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என மாநில மந்திரி புசாருக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை வழங்கிய பிரதமருக்கு எனது மனப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

