


ஈப்போ, பிப்.15: இங்குள்ள கல்லுமலை ஆலய தைப்பூச திருவிழாவில் குறிப்பாக தைப்பூச முதல் நாளில் மாலையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதாக கிரின் ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் சமூக சேவையாளர் தம்பிதுரை கூறினார்.
இவ்வாண்டுடன் ஏழு ஆண்டுகளாக ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய முன்புறத்தில் தைப்பூசத்திற்கு முதல் நாளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருவது வழக்கமாக கொண்டுள்ளோம். அதன் அடிப்படையில் இவ்வாண்டில் சுமார் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டில் கனத்த மழை பெய்த போதும் பக்தர்கள் நேர்த்தியாக வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்றுச் சென்றனர். எங்கள் தலைமை நிறுவனத்துடன் மேலும் 5 கிளை நிறுவனங்களும் ஒன்றிணைந்து இந்த மனிதநேய செயல்நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
எங்கள் நிறுவனம் பிராணிகளுக்கு உணவு உற்பத்தி அல்லது தயாரிக் கும் நிறுவனமாகும். எங்கள் தொழிற்சாலையில் அதிகமான எண்ணிக்கையில் இந்திய தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நாங்கள் இந்த பிராணிகளுக்கான உணவு பொருட்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு, உள்நாட்டின் தேவைக்கும் தயாரித்து வருவதாக அவர் கூறினார்.
இவ்வேளையில் எங்களுக்கு அனுமதி மற்றும் கூடாரம் அமைத்து இடத்தை ஒதுக்கீடு செய்த ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

