
காளிதாஸ் சுப்ரமணியம்
பத்துமலை பிப் 17-
நாட்டில் மிகவும் பிரபலமான பத்துமலை தமிழ்ப் பள்ளியில் இன்று முதலாம் வகுப்பில் 119 மாணவர்கள் காலடி எடுத்து வைத்தனர்.
அதேசமயம் பாலர் பள்ளியில் 75 மாணவர்கள் இணைந்துள்ளனர் என்று பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சரஸ்வதி தெரிவித்தார்.
இன்று நாடு தழுவிய அளவில் 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளிகள் ஏக காலத்தில் திறக்கப்பட்டன.

பெற்றோர்கள் ஆர்வத்தோடு தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அழைத்து வந்தனர்.
நாட்டில் உள்ள தமிழ் பள்ளிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த பள்ளியாக பத்துமலை தமிழ்ப் பள்ளி விளங்குகிறது.
கல்வி சம்பந்தமான அறிவியல் புத்தாக்க போட்டிகள் உட்பட விளையாட்டு போட்டிகளில் பத்துமலை தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கும் ஒரு முன்னோடி பள்ளியாக பத்துமலை தமிழ்ப் பள்ளி விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா , அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஹரி ராஜா, துணை தலைவர் டத்தோ பூவன் இராமலிங்கம், பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் ஆகபள்ளியின் வளர்ச்சிக்கு பக்கப்பலமாக இருந்து வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

இதனிடையே நாட்டில் உள்ள 530 தமிழ்ப் பள்ளிகள் இன்னமும் இருப்பதற்கு பெற்றோர்களே காரணம் என்று டத்தோ பூவன் இராமலிங்கம் தெரிவித்தார்.
தமிழ்ப் பள்ளிகள் மீது பெற்றோர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அளப்பரியது.
சிலர் தங்களது பிள்ளைகளை வேறு மொழி பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தாலும் பெரும்பாலான பெற்றோர்கள் இன்னமும் தமிழ்ப் பள்ளிகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள்.

இதுபோன்ற பெற்றோர்கள் இருக்கும் வரை மலேசிய திருநாட்டில் தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து நீடித்தது இருக்கும் என்று அவர் சொன்னார்.

