
கோலாலம்பூர் பிப் 18-
நம் நாட்டின் கடந்த 200 ஆண்டு கால வரலாற்றைக் திரும்பி பார்க்கும் பொழுது தமிழ்ப்பள்ளி நமது உடலாகவும், உயிராகவும் நமது வாழ்க்கையோடு இரண்டற கலந்து விட்டது என்பது மறக்கவோ, மறைக்கவோ முடியாது என்பது ஒரு வரலாற்று பதிவு.
நாட்டில் இன்று மொத்தம் 530 தமிழ்ப்பள்ளிகள் இருப்பது கணக்கெடுப்பின் வழி தெரியவருகிறது.
ஏறக்குறைய 100 தமிழ்ப்பள்ளிகளுக்கு மேல் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையினால் மூடு விழா காணும் அபாயத்தை எதிர் நோக்கி வருகிறது.
மலேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியர்களான நாம் வேகமாக குறைந்து வருவது மூல காரணமாக இருந்தாலும் , இந்திய பெற்றோர் பிள்ளைகளை பிற மொழி பள்ளியில் சேர்ப்பது மிக முக்கிய காரணமாகிறது என்று உரிமைக் இயக்கத்தின் பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. கணேசன் தெரிவித்தார்.
பொது மக்களும், தமிழ் மொழி ஆர்வலர்களும், பொது இயக்கங்களும் இன்றுவரை தமிழ்ப்பள்ளிகளை பாதுகாக்கவும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தொடர்ந்து விழிப்புணர்வு பரப்புரை செய்து வருகின்ற வேளையில் சிலர் தங்களது பிள்ளைகளை வேற்று மொழி பள்ளிகளுக்கு அனுப்புவது மிகவும் வேதனைக்குறியது.
தமிழ் மொழி, ,தமிழ்ப்பள்ளியை உண்மையாக நேசிக்கும் மக்களே இன்றைக்கு நமக்கு தேவை.
தமிழ் மொழி மற்றும் தமிழ்ப்பள்ளியின் எதிர்காலம் மீது அக்கறையும் பொறுப்பணர்வும் கொண்ட தூர நோக்க சிந்தனையுடையவர்களே சமுதாயத்திற்கு தேவை என்று திரு. கணேசன் வலியுறுத்தினார்

