
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் பிப் 25-
நாட்டில் உள்ள இந்திய தொழில் முனைவோருக்கு உதவ பேங்க் ராக்யாட் BRIEF–i திட்டத்தின் கீழ் பத்து கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இன்று தெரிவித்தார்.
ஏற்கெனவே BRIEF–i திட்டத்திற்கு பேங்க் ராக்யாட் 5 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.
இன்று கூடுதலாக மேலும் ஐந்து கோடி வெள்ளியை பேங்க் ராக்யாட் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் வழி BRIEF–i திட்டத்திற்கு பேங்க் ராக்யாட் பத்து கோடி வெள்ளியை கடனுதவியாக வழங்கி உள்ளது என்று அவர் சொன்னார்.
70 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பேங்க் ரக்யாட் இன்று அறிமுகப்படுத்தி யிருக்கும் இந்த BRIEF–i திட்டம், மலேசிய சமூகம் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதற்கான ஓர் அர்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
அதே வேளையில் தீவிர வறுமையை ஒழிப்பதிலும் மலேசியாவின் பொருளாதாரத்தில் உள்ள இடைவெளியை குறைப்பதற்கும் இது வழிவகுக்கிறது.

இந்திய சமூக தொழில் முனைவோரை ஆதரிப்பதன் மூலம், அனைவருக்கும் வளமான பொருளாதாரத்தை வளர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.
இந்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி வரை 512 இந்திய தொழில் முனைவோருக்கு 4 கோடியே 90 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இன்று பேங்க் ராக்யாட் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற விழாவில் மேலும் பத்து தொழில் முனைவோருக்கு காசோலைகள் நேரடியாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பேங்க் ராக்யாட் தலைவர் டத்தோ முகமட் இர்ஃபான் முகமட் முபாராக், துணை அமைச்சரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

