
கோலாலம்பூர், பிப். 25 -பேரா மாநில ஜசெக நிர்வாக உறுப்பினரும், முன்னாள் மனிதவள அமைச்சரும், பேரா பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வி.சிவக்குமார், மார்ச் 16 அன்று நடைபெறும் ஜசெகவின் தேசிய தேர்தலில் போட்டியிடுகிறார்.
சிறந்த அரசியல் பேச்சாளராகவும், மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் தலைவராகவும் விளங்கும் வி.சிவக்குமார், இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ஜசெகவின் பல்லின அரசியல் அடிப்படையை மேலும் வலுப்படுத்தக்கூடிய தலைவராக உருவாகுவார் விளங்குவார் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.
மடானி அரசாங்கத்தில் மனிதவள அமைச்சராகக் குறுகிய காலம் பணியாற்றியிருந்தாலும், நாட்டின் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக தன் தொகுதி மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கியவர் என்பது அனைவரும் ஏற்கும் உண்மையாகும்.
கட்சித் தேர்தலில் தன் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், போட்டியிடுவது உறுதி எனவும் வி.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 1997ஆம் ஆண்டு ஜசெகவில் இணைந்தவர் 2008ஆம் ஆண்டு பேரா துரோனோ சட்டமன்றத் தேர்தலில் ஜசெக சார்பில் முதல் முறையாக போட்டியிட்டு, மாபெரும் வெற்றியைப் பெற்றார் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகும்.
இதற்கிடையில், ஜசெகவின் நடப்பு தலைமையிலுள்ள டான் கொக் வாய் (ஆலோசகர்), ஃபோங் (பொருளாளர்), எம்.குலசேகரன் (உதவித் தலைவர்), பீ புன் போ (பினாங்கின் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்) ஆகிய முக்கிய நிர்வாகிகள் கட்சித் தேர்தலில் இருந்து விலகியுள்ள நிலையில், துடிப்பும் செயல்திறனும் கொண்ட ஒரு சக்திவாய்ந்த தலைவராக வி.சிவக்குமார் வெற்றி பெறுவது கட்சிக்கும் மக்களுக்கும் பயனளிக்கும் என்று பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒன்றிணைந்து சிவக்குமாரின் வெற்றியை உறுதிப்படுத்துவோம் என அவரது ஆதரவாளர்கள் முழங்கினர். ஒரு வலுவான இந்தியத் தலைவர் ஜசெகவின் உயர்விற்கும், மக்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்பதில் அனைவரும் உறுதியடைந்துள்ளனர்.
வெற்றி நாளை வரலாறு எழுதும்

