
சமீப காலமாக நாட்டில் இனவாதம் மற்றும் சமய நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது . அண்மையில் ஒரு அங்காடி ( Penjaja ) கடை உரிமையாளர் ஒருவர் தன் கடையின் மேசையில் சோளம் கெலிங் (keling) மக்களுக்கு விற்பனைக்கு இல்லை என்று எழுதி வைத்த சிக்கல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து , இப்பொழுது (Era FM) ஏரா பண்பலை வானொலியில் தைப்பூச காவடி ஆட்டத்தை செய்தி வாசிப்பாளர் ஒருவர் தன்னுடைய சக ஊழியர்களுக்கு ஆடி காட்டிய காணொலி இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.
பல்வேறுபட்ட இனம், மொழி, மதம், கலாசாரம் கொண்டுள்ள நாம், மலேசியர்கள் என்ற ஒரே உணர்வோடு இந்த நாட்டில் வாழ்து கொண்டிருக்கிறோம்.
மலேசியா என்னும் உன்னத நாட்டைக் கட்டமைப்பதில் இனம்⸴ மொழி⸴ மதம் கடந்து மலேசியர்கள் என்னும் ஒற்றுமையே காரணமாகக் திகழ்கிறது.
இனம் மற்றும் சமயம் நம்பிக்கை பற்றிய நடவடிக்கை, விவாதம் மற்றும் கலந்துரையாடல் எப்பொழுதும் ஒற்றுமையை வளர்க்க வேண்டுமே ஒளிய, மக்களிடையே சிக்கல்களை ஏற்படுத்த கூடாது.
நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஜனநாயகம் மற்றும் பல்வேறு சமய நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள நாட்டில் வெறுப்பை தூண்டும் மதவாத நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றன.பல்லினங்கள் நிறைந்த மலேசிய நாட்டில் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளுக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
இது போன்ற சிக்கல்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் முதலில் மலேசியர்களின் மத நல்லிணக்கத்தை மக்களுக்கு புரியும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நாடெங்கிலும் நடத்த வேண்டும்.
மேலும் பள்ளிகளிலும் மத நல்லிணக்கத்தை பற்றியும் , அதை மீறினால் நாட்டின் சட்ட திட்டத்தின் கீழ் என்ன தண்டனைகள் வழங்கப்படும் என்பதை ஒரு பாடமாக கொண்டு வர வேண்டும். மத நல்லிணக்கம் மனித குலத்தில் நட்பு, அன்பு, அமைதி போன்றவற்றை உருவாக்குகிறது என்ற அடிப்படையில் இது போன்ற செயல் திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும் .
இப்படிச் செய்வதன் மூலம் மட்டுமே ஒரு நல்ல சமத்துவம்,மற்றும் பக்குவப்பட்ட சமுதயம் உருவாகும்.
சமுதாயம் பக்குவப்ட பக்குவப்ட ஒரு நல்ல அமைதியான அரசியல் சூழலை உருவாக்க முடியும். இல்லையென்றால் ஒரு நீடித்த நிலையான அரசியல் சூழல் உருவாக்குவதில் சிக்கல் ஏற்படும்.
கணேசன்
உரிமை
பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர்

