பான் மசாலா விளம்பரத்தில் நடித்த ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷராஃப் ஆஜராக நுகர்வோர் ஆணையம் உத்தரவு

பான் மசாலா விளம்பரத்தில் நடித்து பிரதிநிதிப்படுத்திய நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷராஃப் ஆகியோர் ஆஜராக ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

பான் மசாலா, குட்கா விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் நடிப்பது குறித்து, விமர்சனங்கள் எழுந்தாலும், அதனை நடிகர்கள் பெரிதாய் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில், பான் மசாலாவுக்கு எதிராக வழக்குரைஞர் யோகேந்திர சிங் பதியால், ஜெய்ப்பூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு அளித்தார். 

மனுவில் அவர் கூறியதாவது, “பான் மசாலாவின் ஒவ்வொரு தானியத்திலும் குங்குமப்பூ சக்தி இருப்பதாகக் கூறி, மக்களை வாங்க வைக்கின்றனர். 5 ரூபாய் பான் மசாலாவில் கிலோ 4 லட்சம் மதிப்பிலான குங்குமப்பூ இருப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை. குங்குமப்பூவின் வாசனையைக்கூட அதில் சேர்க்க முடியாது. 

பான் மசாலா, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை உருவாக்கும். ஆனால், பான் மசாலா நிறுவனம் பல கோடி மதிப்பிலான வணிகம் செய்கிறது.

பான் மசாலா குறித்து தவறான தகவல்களைக் கூறி, விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுமக்களின் நலனைக் காக்க, உடனடியாக அமல்படுத்தும்வகையில் பான் மசாலா மற்றும் அது தொடர்பான விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மனுவை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், பான் மசாலா விளம்பரங்களில் நடிக்கும் ஷாருக்கான், அஜய் தேவ்கான், டைகர் ஷராஃப், ஜெ.பி. இன்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் விமல் குமார் அகர்வாலும் மார்ச் 19 ஆம் தேதியில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மேலும், ஆஜராகவில்லையெனில், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 30 நாள்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles