
பேங்காக், மார்ச் 31- தாய்லாந்தில் அண்மையில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்திற்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதற்கு நாடு பாதுகாப்பானதாக இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்த இயற்கைப் பேரிடரில் சுற்றுலாப் பயணிகள் யாரும் காயமடையவில்லை என்பதோடு சுற்றுலாத் தலங்களும் பாதிக்கப்படவில்லை என்று அதன் சுற்றுலாத் துறை அமைச்சர் கூறியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) தெரிவித்தது.
பயணங்கள், ஹோட்டல்கள் மற்றும் நிகழ்வுகள் வழக்கம் போல் தொடரும் என்று அமைச்சர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறினார்.
பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுலா போலீசார் முக்கிய இடங்களை கண்காணித்து வருகின்றனர். பயணங்கள் ஏதும் ரத்து செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
பேங்காக் மற்றும் பிரபலமான சுற்றுலா தீவான புக்கெட் உள்ளிட்ட அனைத்துலக விமான நிலையங்களும் வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளன என்று ஒழுங்குமுறை ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ)

