
கோலாலம்பூர், ஏப். 21 – இங்கு நேற்று நடைபெற்ற கெஅடிலான் ராக்யாட் கட்சியின் (பிகேஆர்) பிரதேசத் தேர்தலில் கட்சியின் தகவல் தலைவர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், லெம்பா பந்தாய் தொகுதி தலைவராக போட்டியின்றித் தேர்வு பெற்றார்.
கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் பிரிவுகளுக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் கெஅடிலான் 2025 தேர்தல் வலைத்தளம் மூலம் அறிவிக்கப்பட்டன .
தகவல் தொடர்பு அமைச்சரும் லெம்பா பந்தாய் எம்.பி.யுமான ஃபாஹ்மி, 2025 முதல் 2028 வரை தொடர்ந்து இரண்டாவது தவணைக்கு தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.
இந்தப் பிரிவின் துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர் பதவிகளுக்கு முறையே அப்துல்லா இஷார் முகமது யூசோஃப் மற்றும் சான் பூய் லாய் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தனது பதவிக்கு போட்டியிட எந்த வேட்புமனுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று ஃபாஹ்மி கடந்த மார்ச் 17ஆம் தேதி கூறியிருந்தார்.
வரும் மே மாதம் நடைபெறும் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதையும் ஃபாஹ்மி உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின் பண்டார் துன் ரசாக் பிரிவுத் தலைவர் பதவியை போட்டியின்றித் தக்க வைத்துக் கொண்டார்.