
அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 50 சீட், கூட்டணி அமைச்சரவை என்று நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பேசியதால், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. திமுக, அதிமுக, பாஜ ஆகிய கட்சிகள் அணி அமைத்துப் போட்டியிட்டன. அதில் தமிழகம் மற்றும் புதுவை என 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
தேமுதிக குறைந்தது 25 தொகுதிகளாவது கேட்கும். அதுதவிர டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலா 10 சீட் வேண்டும் என்று கேட்கின்றனர். இதைத் தவிர புதிய தமிழகம், தமிழக முன்னேற்றக் கழகம், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட சில சிறிய கட்சிகளும் உள்ளன. அவர்களும் தொகுதிகளை கேட்கின்றனர். இப்படி பார்த்தால், 130 தொகுதிகளுக்கு மேல் கூட்டணிக்கு விட்டுக் கொடுக்க வேண்டியது வரும்.
அப்படி என்றால் அதிமுக 75 முதல் 100க்கும் குறைவான தொகுதிகளில்தான் போட்டியிட முடியும். இதனால் இந்த முறை வசமாக பாஜவிடம் அதிமுக சிக்கிக் கொண்டு தவியாய் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அதிமுகவிடம் எதுவும் கேட்காமல் பாஜ 50 தொகுதி, கூட்டணி அமைச்சரவை என்றெல்லாம் பேசி வருவது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாததால் தவித்து வருகின்றனர்.

