
புத்ராஜெயா, ஜூன் 11- சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் 15 (உப்ஸி) மாணவர்களின் உயிரைப் பறித்த விபத்து போன்ற துயரச் சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வி அமைச்சு தொடர்புடைய தரப்பினரிடமிருந்து பல்வேறு பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
அப்பரிந்துரைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ஏதுவாகப் பல்கலைக்கழக மாணவர்கள் இரவில் பயணம் செய்வதற்குப் பதிலாகப் பகலில் பயணம் செய்வதும் ஒன்றாகும் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ப்ரி அப்துல் காடீர் கூறினார்.
பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியாக பல்கலைக்கழக மாணவர்களும் இளங்கலை பட்டதாரிகளும் இரவில் பயணம் செய்வதற்குப் பதிலாக பகலில் பயணம் செய்ய வேண்டும் என்று சிலர் பரிந்துரைத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
2025 ஆசியான்-மலேசியா தலைமைத்துவத்தை முன்னிட்டு நேற்று தனது அமைச்சில் நடைபெற்ற மதிய உணவுடன் கூடிய ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் அமர்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

