

ஈப்போ, ஜுன்.20: நம்முடைய அன்றாட வாழ்க்கையை கடந்து செல்ல சமுதாயம், சமயம் மற்றும் மொழி சிறந்த பங்கினை வகிக்கிறது. அதன் அடிப்படையில் தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் இந்நாட்டில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது மிகவும் அவசியம் என்று கிந்தா இந்தியர் சங்கமும், செட்டியார் தமிழப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் ஒன்றிணைந்து தமிழ் மணக்கும் இலக்கியம் என்ற நிகழ்வை தொடக்கி வைத்தபோது ம இ கா வின் தேசிய உதவித்தலைவரும், பேராக் ம இ கா வின் தலைவருமான டான்ஸ்ரீ எம். இராமசாமி கூறினார்.
இத்தகைய நிகழ்வில் தமிழகத்தின் பேச்சாளர்கள் அல்லது பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு தமிழ் இல்க்கியத்தின் வரலாறு மற்றும் அதன் மரபுகளை எடுத்துரைக்கப்படுகிறது. இதனால், இங்குள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழ் இல்க்கியத்தின் மாண்புகள் குறித்து அறிய இத ஒரு தருணமாக அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நாம் எப்பொழுதும் நாம் வந்த பாதையை மறந்து விடக்கூடாது. இன்றைய நவீன வாழ்க்கையை எண்ணி தம்பட்டம் செய்வது ஒருபோதும் நன்மையளிக்காது. தமிழ் இலக்கியம் வாயிலாக நாம் யார், எங்கிருந்து வந்தவர்கள், நமது வரலாறு மற்றும் எத்தகைய பாரம்பரியத்தை கொண்டவர்கள் போன்ற மரபுகளையும் வரலாற்றையும் கண்டறிய முடியும் என்று அவர் கருத்துரைத்தார்.
கிந்தா இந்தியர் சங்கமும், செட்டியார் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் ஒன்றிணைந்து இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். தமிழகத்தின் பட்டிமன்ற பேச்சாளரும்,வழக்கறிஞருமான கலை அமுதன் மிகவும் சிறப்பாக தமிழ் இலக்கியத்தை தமிழ் சமுத்திரத்தில் இருந்து கொண்டு வந்து இங்குள்ள வருகையாளர்களிடம் அள்ளி வீசினார் என்று ஏற்பாட்டுக்குழு தலைவர் முனைவர் சேகர் நாராயணன் பாராட்டினார்.
இந்த தமிழ் சமுத்திரத்தில், நமது முகவரி,மனித தன்மை போன்ற மனிதகூறு பண்புகள் குறித்து அவர் பேசினார். அத்துடன், தொடக்கப்பள்ளி மாணவர்கள், வருகையளித்த இளைஞர்களுக்கு இவரின் உரை தன்முனைப்பாக அமைந்தது. இவரின் நகைச்சுவை கலந்த உரையானது வருகையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்நிகழ்வு வெற்றிபெற உதவிகள் வழங்கிய கிந்தா இந்தியர் சங்க நிர்வாகத்தினர், செட்டியார் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் பேராக் ம இ கா நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

