
பட்டர்வொர்த் ஜூன் 23-
பினாங்கு மாநிலத்தில் உள்ள பட்டர்வொர்த் ஸ்ரீ கங்காதரன் சிவபெருமான் ஆலயத்தில் ஒன்பது அடுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
மலேசியாவின் மிகப்பெரிய சிவன் ஆலயமான ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமான் ஆலயத்தின் ராஜகோபுரத்தின் கட்டுமானம் அடிக்கல் நாட்டு விழாவில் 5,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஆலயத்தின் கட்டடக் குழுத் தலைவரும் மலேசிய மக்கள் சக்தி கட்சியில் தலைவருமான டத்தோஶ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் தலைமையில் இந்த விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
9 அடுக்கு ராஜகோபுரம், 5 அடுக்கு கோபுரங்கள் என இவ்வாலயம் கட்டப்படவுள்ளது. குறிப்பாக கருங்கல்லால் இவ்வாலயம் கட்டப்படவுள்ளது என்று அவர் சொன்னார்.
கட்டப்படவிருக்கும் தலத்தில் ஏகதச ருத்ர ஜெப ஹோமம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
ஆலயம் கட்டும் தலத்தை சுத்தம் செய்வது இந்த ஹோமத்தின் முதன்மை நோக்கமாகும். அதே வேளையில் மக்கள் பசி, பட்டினி இல்லாமல் தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்பதும் இந்த ஹோமத்தின் நோக்கமாகும்.
இதன் மூலம் மலேசியாவின் மிகப் பெரிய சிவன் ஆலயமான ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமான் ஆலயத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்ற உத்வேகமும் எங்களுக்கு கிடைத்தது என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.

