
ஈப்போ,ஜூலை02: மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்து கூரை சேதமடைந்த பக்கிட் மேரா சீனப்பள்ளியின் கூரையைச் சீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் தெரிவித்தார்.
மரக்கிளை முறிந்து விழுந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் கூரை மட்டுமே பெரும் சேதம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்ட சிவகுமார் சீரமைப்பு பணிகள் ஓரிரு நாளில் தொடங்கப்படும் என்றார்.
முன்னதாக பாதிக்கப்பட்ட பள்ளிக்கு வருகை புரிந்த சிவகுமார் சேதமடைந்த பள்ளியின் கூரையைச் சீரமைக்க குத்தகையாளரை உடனடியாக நியமித்திருப்பதாகவும் சீரமைக்கும் பணிக்கான முழு செலவினத்தையும் தனது சேவை மையம் ஏற்றுகொள்ளும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிவகுமாரின் வருகையால் சேதமடைந்த பள்ளியின் கூரை விரைவில் சீரமைக்கப்படும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்தார்.

