
ஷா ஆலம், ஜூலை 2 – கடந்த மாதம், சைபர்ஜெயாவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளூர் பல்கலைக்கழக மாணவி ஒருவரைக் கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர், அங்கு பலமுறை தனது காதலியுடன் இரவைக் கழித்திருப்பதாக நம்பப்படுகின்றது.
கொலை சம்பவத்திற்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒன்றாக வீட்டில் தங்கியிருந்த தோழியும், முக்கிய சந்தேக நபரின் காதலியுமானவர்.
தமது வீட்டின் நுழைவு அட்டையையும், சாவியையும் காதலனிடம் ஒப்படைத்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக, சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் கூறினார்.
அந்த சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது தவறான எண்ணம் கொண்டிருப்பதோடு, அப்பெண் தனியாக வீட்டில் இருந்த சமயத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாக அவர் கூறினார்.
தேர்வு காலம் முடிந்து வீடு திரும்பிய தனது காதலி கொடுத்த வீட்டின் நுழைவு அட்டையையும் சாவியையும் கொண்டு வீட்டினுள் நுழைந்த அச்சந்தேக நபர், கடுமையான பொருளைக் கொண்டு அப்பெண்ணின் தலையில் தாக்கி மரணம் விளைவித்ததோடு கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் நான்கு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர் என ஹுசைன் தெரிவித்தார்.
“முக்கிய சந்தேக நபர் 20 வயதுடையவர் மற்றும் அவருக்கு நிரந்தர வேலை இல்லை என்றும் கண்டறியப்பட்டது.
“மேலும், காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று பெண்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் வீட்டுத் தோழி மற்றும் சந்தேக நபரின் காதலியும் ஆவார். இந்த கொலை வழக்கு குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரிக்கப்படுகின்றது.
பெர்னாமா