
ஷா ஆலம், ஜூலை 14-
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலத்தைக் கட்டுவதற்கு வழங்கப்பட்ட நிலத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆலயம் கட்டாவிட்டால் அந்நிலத்தை மாநில அரசு மீட்டுக் கொள்ளும் என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
திரும்பப் பெறப்பட்ட நிலம் தேவைப் படுபவர்களுக்கு வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்றம் மற்றும் சுற்றுலா துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுவி லிம் கூறினார்.
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு பௌத்தம், கிறிஸ்தவம், இந்து, சீக்கியம் மற்றும் தாவோயிசம் (லிமாஸ்) சமய சிறப்புக் குழு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 400 நிலங்களை அங்கீகரித்துள்ளதுஎன்று அவர் சட்டமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.
முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தளங்களுக்கு நிலங்கள் வழங்கிய சிலாங்கூர் அரசுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேசமயம் வழங்கப்பட்ட நிலத்தில் குறிப்பிட்ட காலத்தில் ஆலயங்கள் கட்ட விட்டால் அந்த நிலங்களை மீட்டுக் கொள்வோம் என்று டத்தோ இங் சுவி லிம் கூறியிருப்பது முறையல்ல. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
காரணம் ஒரு ஆலயம் கட்டுவது எளிதான காரியம் அல்ல. போதுமான நிதியும் கட்டட வரைப் படத்திற்கான ஊராட்சி ஒன்றியத்தின் அனுமதியும் இருந்தால் மட்டுமே கட்ட முடியும்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஆலயம் கட்டும் விவகாரத்தில் செயல்பட முடியாது.
ஆகம முறைப்படி தான் ஆலயங்கள் கட்டப்பட வேண்டும்.
ஆகவே ஆலயத்தை கட்டவில்லை என்றால் நிலத்தை எடுத்துக் கொள்வோம் என்று கூறுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த விவாகரத்தில் மாநில அரசு விவேகத்துடன் செயல்பட வேண்டும் என டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

