
பந்திங், ஜூலை 15- பந்திங் சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் ‘கைராட்
டாருள் ஏஹ்சான்‘ (கே.டி.இ.) எனப்படும் மரண சகாய நிதி பதிவுத் திட்டம்
நேற்று இங்குள்ள கம்போங் பாத்திமா சமூக மண்டபத்தில் நடத்தப்பட்டது.
இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் ஊக்கமூட்டும் வகையிலான
ஆதரவு கிடைத்ததோடு 50 வயதுக்கும் மேற்பட்ட 170க்கும் மேற்பட்டோர்
இத்திட்டத்தில் பதிந்து கொண்டனர்.
இந்த மரண சகாய நிதித் திட்டத்தில் பதிவு செய்வதற்கான பணிகளை
எளிதாக்குவது, பதிவுகளை சரிபார்ப்பது மற்றும் ஆலோசகச் சேவைகளை
வழங்குவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் தொகுதி சட்டமன்ற
உறுப்பினரும் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தலைமையிலான தொகுதி சேவை
மையம் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த திட்டம் வெற்றி பெறுவதற்கு தொகுதி இந்திய சமூகத் தலைவர்கள்,
நகராண்மைக் கழக உறுப்பினர்கள் மற்றும் தொகுதி சேவை மைய
பொறுப்பாளர்கள் பெரும் பங்காற்றினர்.
மக்களின் நலனுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து அவர்களுக்கான
திட்டங்களை முன்னெடுக்கும் தொகுதி சேவை மையத்தின் அளப்பரிய
பணியினை இத்தகைய திட்டங்கள் பிரதிபலிக்கின்றன.
சிலாங்கூரில் வசிக்கும் மற்றும் வாக்காளராக இருப்போருக்கு மரண
சகாய நிதியாக 1,000 வெள்ளியை அவர்களின் வாரிசுகளுக்கு வழங்க
வகை செய்யும் இந்த கைராட் டாருள் ஏஹ்சான் திட்டத்தை மாநில அரசு
முன்னெடுத்து வருகிறது. ஐம்பது வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும்
மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்யலாம்

