
கிளானா ஜெயா, ஜூலை 20-
சிலாங்கூர் மாநில அமெச்சூர் ஓட்டப் பந்தய சங்கத்தின் புதிய தலைவராக டத்தோ எஸ் எம் முத்து போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
கிளானா ஜெயாவில் இன்று காலையில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் அவர் ஏகமனதாக தேர்வானார்.
துணை தலைவராக எஸ் குணசீலன், உதவித் தலைவர்களாக டத்தோ கணேசன் ஆர்.முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் செயலாளராக மோகன் தேர்வு செய்யப்பட்ட வேளையில் பொருளாளர் நியமனம் செய்யப்படுவார் என்று டத்தோ எஸ் எம் முத்து தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அமெச்சூர் ஓட்டப் பந்தய சங்கத்தில் மொத்தம் 9 மாவட்டங்கள் உள்ளன.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆறு மாவட்டங்கள் டத்தோ எஸ் எம் முத்துவை தலைவராக முன்மொழிந்தன.
உலு சிலாங்கூர் மாவட்ட தலைவர் ஹாஜி முகமட் பாவ்சி மணிவண்ணன்,
உலு லங்காட் மாவட்ட தலைவர் பிரபாகரன், கோலலங்காட் மாவட்ட தலைவர்
பிரகாஷ், பெட்டாலிங் மாவட்ட தலைவர் டத்தோ எஸ் எம் முத்து மற்றும் சிப்பாங் மாவட்ட தலைவர் குணசீலன் மற்றும் கிள்ளான் மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் அந்த ஆறு மாவட்ட தலைவர்கள் ஆவர்.
மேலும் முன்னாள் மலேசிய தடகளத் தலைவர் டத்தோ எஸ்.எம். முத்து மற்றும் ஆறு மாவட்ட தலைவர்களுக்கு சிலாங்கூர் தடகள சங்கத்தால் (SAA) விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை இன்று இவர்கள் முற்றாக நிராகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட விதிகளுக்கு ஏற்ப இந்த தடை செல்லாது. மேலும் கடந்த மே 25 ஆம் தேதி நடந்த கூட்டமும் முறையாக நடத்தப்படவில்லை.அந்த கூட்டத்தில் பொருளாளர் கலந்து கொள்ளவில்லை. கணக்கறிக்கையில் ஏராளமான கேள்விகளுக்கு பதில் இல்லை.
இதன் எதிரொலியாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆறு மாவட்டங்கள் டத்தோ எஸ் எம் முத்துவுக்கு ஆதரவாக களம் இறங்கியது.
பெட்டாலிங் மாவட்டத்தை வழிநடத்தும் டத்தோ எஸ் எம் முத்து இன்று முதல் சிலாங்கூர் மாநில அமெச்சூர் ஓட்டப் பந்தய சங்கத்தை வழி நடத்துவார் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தற்போது தலைவராக இருந்த நூர்ஹயாதி கரீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை ஆறு மாவட்டங்கள் எடுத்தன.
நூர்ஹயாதி சங்கத்தின் நிதிக் கணக்குகளை குழுவின் ஒப்புதல் இல்லாமல் மாற்றியமைத்து, அவற்றை விளையாட்டு ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்ததாக அவர்கள் குற்றம் சாட்டினார்.
இனிமேல் சிலாங்கூர் மாநில அமெச்சூர் ஓட்டப் பந்தய சங்கத்தை டத்தோ எஸ் எம் முத்து வழிநடத்தும் வேளையில் அவருக்கு பக்கப் பலமாக ஆறு மாவட்டங்கள் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

