
அம்பாங், ஜுலை, 21-
சிலாங்கூர் மாநில அரசு, “மைஃயூச்சர் ஜோப்ஸ்” வேலை வாய்ப்பு நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வரும் வேலை வாய்ப்பு கண்காட்சியில் இந்திய இளைஞர்களின் பங்கேற்பு அவசியமாகும் என்று சிலாங்கூ மாநில அரசின் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வலியுறுத்தியுள்ளார்.
தங்களின் பட்டப்படிப்பு முடிந்தப் பின்னரும் தகுந்த வேலைகள் கிடைக்காமல் இந்திய இளைஞர்கள் தடுமாற்றத்துடன் இருக்கின்றனர். இத்தகையோர், சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் வேலை வாய்ப்பு கண்காட்சியில் கலந்து கொள்வார்களேயானால், தங்களுக்கு பொருந்தி வரக்வடிய வேலை வாய்ப்பை தேர்வு செய்து கொள்ள முடியும் என்று பாப்பாராய்டு கேட்டுக்கொண்டார்.
கடந்த வாரம் சனிக்கிழமை, உலு லங்காட் மாவட்ட நிலையிலான வேலை வாய்ப்பு கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பாப்பாராய்டு இதனை தெரிவித்தார்.
வேலை தேடிக்கொண்டிருக்கும் சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களும் பயன் அடையும் நோக்கில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் 25 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் மொத்தம் 3,197 வேலை வாய்ப்புகள் திறக்கப்பட்டதாக பாப்பாராய்டு தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் வேலை தேடுகின்றவக்ள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முதலாளிகளுடனான நேரடிச் சந்திப்புகள் மூலம் வேலை பெறுவதற்குரிய வாய்ப்பினை இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி வழங்கியதாக அவர் கூறினார்.

