மேம்பாட்டுத் திட்டங்களில் புறக்கணிக்கப்படும் புக்கிட் கெமுனிங்- மாநகர் மன்ற கூட்டத்தில் ஷா ஆலம் கவுன்சிலர் யோகேஸ்வரி சாடல்

ஷா ஆலம், ஜூலை 27- அடிப்படை வசதி, மேம்பாடு, வெள்ளம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் புக்கிட் கெமுனிங் வட்டாரத்தை உள்ளடக்கிய ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 14வது மண்டலம் புறக்கணிக்கப்படுவது குறித்து அம்மண்டலத்திற்கு பொறுப்பான கவுன்சிலர் யோகேஸ்வரி சாமிநாதன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

புகார்கள் மீது தாமதமாக நடவடிக்கை எடுக்கப்படுவது, அடிப்படை வசதிகள் அறவே இல்லாதது, சாலையில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படாதது, விளையாட்டு மைதானங்கள் கைவிடப்பட்டது போன்ற பிரச்சினைகள் இப்பகுதி குடியிருப்பாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் சொன்னார்.

சேவை வழங்கல், அடிப்படை வசதிகளை தரம் உயர்த்துதல், மேம்பாடு ஆகியவற்றில் இப்பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்ற மனகுறை மக்கள் மனதில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், புக்கிட் கெமுனிங் வட்டாரத்தை மாநகர் மன்றம் மாற்றாந்தாய் பிள்ளை போல் நடத்துவதாக அவர்கள் உணர்கின்றனர் என்றார்.

வளர்ச்சியடைந்த மற்றும் போட்டித்தன்மைமிக்க மாநகராக ஷா ஆலம் விளங்கினாலும் மேம்பாட்டில் மட்டும் சமநிலைப் போக்கு கடைபிடிக்கப்படுவதில்லை.

புக்கிட் கெமுனிங் உள்பட மாநகரின் அனைத்து பகுதிகளும் நியாயமாகவும் சமநிலையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என்று அவர் கடந்த வாரம் நடைபெற்ற மாநகர் மன்றத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போது கூறினார்.

புக்கிட் கெமுனிங் வட்டாரமும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஒரு பகுதி என மறந்து விடக்கூடாது. இவ்வட்டார மக்களும் வரி செலுத்துவதோடு மாநகர் மன்றத்தின் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் ஒத்துழைப்பு தருகின்றனர். ஆகவே இவ்வட்டாரத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வெள்ளம்
கடந்தாண்டு ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம் இப்பகுதி மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதோடு விரிவான மற்றும் விரைவான வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தின.

கால்வாய்கள் அடைபட்டு நீரோட்டம் தடைபடுவது, தொழில்பேட்டிகளில் நிரம்பிய நீர் லோட் நிலக் குடியிருப்புகளுக்கு பரவுவது போன்ற பிரச்சினைகளைக் களைய அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்தியுள்ளேன் என்று யோகேஸ்வரி குறிப்பிட்டார்.

அமலாக்கம்/ அலிபாபா லைசென்ஸ் விவகாரம்
தங்களுக்கு வழங்கப்படும் வர்த்தக உரிமங்களை உள்நாட்டினர் சிலர் அந்நிய நாட்டினருக்கு வாடகைக்கு விடுகின்றனர்.

அலிபாபா எனப்படும் இந்த இத்தகையச் செயல்கள் ஊராட்சி மன்றங்களின் நம்பகத்தன்மையை கேள்வியெழுப்பும் வகையில் உள்ளது.

தளர்வான விண்ணப்ப அனுமதி, லைசென்ஸ் துஷ்பிரயோம், அனைத்து அரசு துறைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது போன்ற பலவீனங்கள் இத்தகைய பிரச்சினைகள் எழுவதற்கு காரணமாக உள்ளன.

அந்நிய வர்த்தகர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த குடிநுழைவுத் துறையினர் உள்ளிட்ட அமலாக்கத் தரப்பினர் எப்போதோ ஒரு முறை அல்லாமல் ஆண்டுக்கு குறைந்தது மூன்று முறையாவது சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

சாலை பராமரிப்பு
ஜாலான் புக்கிட் கெமுனிங் சாலை உள்பட பொதுப்பணித் துறை மேற்பார்வையில் உள்ள பல சாலைகள் வாகனமோட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்றவையாக உள்ளன. இங்கு சாலைகளில் சாலைகளில் தெரு விளக்குகள் எரியாததோடு பேருந்து நிலைய வசதியும் இங்கு இல்லை.

பாதசாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நட்புறவான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படவில்லை.

இப்பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண்பது அவசியம் என அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles